தமிழக செய்திகள்

விளாத்திகுளத்தில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் விநியோகம்

விளாத்திகுளம் வனத்துறை சார்பில் ஆற்றுப் பாலத்திற்குக் கீழே உள்ள வனத்துறை நர்சரியில் வைத்து தேக்கு, மகாகனி உள்ளிட்ட மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட வனத்துறை அலுவலர் இளையராஜா உத்தரவின்படி, விவசாய நிலங்களைச் சுற்றி வேலி மற்றும் தண்ணீர் வசதி கொண்டுள்ள விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்படுகின்றன.

இலவச மரக்கன்றுகள் வழங்கல்

இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

விளாத்திகுளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விளாத்திகுளம் ஆற்றுப் பாலத்திற்குக் கீழே உள்ள வனத்துறை நர்சரியில் வைத்து தேக்கு, மகாகனி, குமிழ்தேக்கு, வேங்கை, கொய்யா, வேம்பு, ஈட்டி, மலைவேம்பு, எலுமிச்சை, சந்தனமரம், செம்மரம், மாதுளை, நெல்லி, கொடிக்காய், சீத்தா, பலா மற்றும் புளி ஆகிய பல்வேறு வகையான மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

விவசாயிகள் நேரில் வர வேண்டும்

மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள், மரம் நடவு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் பட்டா நகல், குடும்ப உறுப்பினரின் அடையாளச் சான்று நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் நிலத்தின் உரிமையாளர் புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு விளாத்திகுளம் வனச்சரகர் முகைதீன் மற்றும் வனவர் பாண்டியராஜன் ஆகியோரை தொடர்புகொண்டு இலவச மரக்கன்றுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT