தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் 48 கோவில்களில் நாளை முதல் இலவச நீர்மோர் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

நீர்மோர் வழங்கும் திட்டம் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.

சென்னை,

சென்னையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் முதற்கட்டமாக 48 கோவில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தொடங்கி வைக்கப்படுகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவர். எனவேதான், வெயிலின் தாக்கம் தொடங்குவதற்கு முன்பாக இந்த திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். கோவிலுக்குள் கருங்கல் பதித்த தரை உள்ள இடங்களில் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு கயிற்றால் ஆன தரை விரிப்பு அமைக்கப்படும்.

முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் அனைத்து மண்டலங்களிலும் உள்ள திருக்கோவில்களில் உழவாரப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. உலக முருக பக்தர்கள் மாநாட்டை நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பழனியில், உலக முருக பக்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கானப் பணிகளில் இந்துசமய அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT