தமிழக செய்திகள்

இனி ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் மகளிருக்கு ரூ.2,000 வழங்கப்படும் - அமைச்சர் கீதா ஜீவன் உறுதி

2026 தேர்தல் உஷ்ணம் அதிகரித்துவிட்டதால் கோடைக்காலத்திற்கு ரூ.2 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளீர்கள் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

மகளிர் உரிமைத்தொகையாக மாதம் ரூ.1,000யை திமுக அரசு வழங்கி வருகிறது. தேர்தலை முன்னிட்டு அடுத்து 3 மாதத்துக்கு சேர்த்து 3 ஆயிரம் ரூபாய், கோடைக்கால சிறப்பு நிதியாக 2 ஆயிரம் ரூபாய் என 5 ஆயிரம் ரூபாய், உரிமைத்தொகை பெறும் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.

அவர் கூறியதாவது:-

2026 தேர்தல் உஷ்ணம் அதிகரித்துவிட்டதால் கோடைக்காலத்திற்கு ரூ.2 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளீர்கள். இரவோடு இரவாக தொகை வரவு வைப்பது தேர்தல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக மக்கள் பேசுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலம் வருகிறது.

தேர்தலை மையமாக வைத்து வழங்கி உள்ளீர்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை யாரும் எதிர்க்க மாட்டார்கள். பிறகு முன்கூட்டியே ஏன் கொடுத்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் ஏ.வ.வேலு பதில் - அதில், கோடைக்காலம் வருகிறது. மக்களுக்கு மருத்துவ செலவு வரலாம் என்பதால் 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது என்றார்.

தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது:-

கருணாநிதி ஆட்சியில் இலவச டிவி வழங்கிய போதும் அதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. இனி எல்லா ஆண்டும் கோடை காலத்தில் மகளிருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். பாஜகவை சேர்ந்தவர் மகளிர் உரிமைத்தொகைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த சூழ்ச்சியை முறியடித்துள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT