தமிழக செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மேட்டூர்,

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீரின் அளவு, பாசன தேவைக்கு ஏற்றவாறு அதிகமாகவும், குறைவாகவும் திறக்கப்படுகிறது. கடந்த 12-ந் தேதி வரை டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இதனிடையே காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்தது. இதையடுத்து கடந்த 13-ந் தேதி முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஒரு சில நாட்களில் டெல்டா பாசன பகுதிகளில் மழை பொழிவு குறைந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்தது. இதனால் கடந்த 17-ந் தேதி முதல் அணையிலிருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இந்தநிலையில் டெல்டா பாசன பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் தண்ணீர் தேவை குறைந்துள்ளதால், அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 18 ஆயிரம் கனஅடியிலிருந்து 14 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இன்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரத்து 525 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 98.15 அடியாக இருந்தது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்