திருநாவுக்கரசு 
தமிழக செய்திகள்

வேலை கிடைக்காததால் விரக்தி; மனு மூட்டையுடன் வந்த நபரால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

நுழைவு வாயிலில் தலையில் மூட்டையுடன் வந்த திருநாவுக்கரசை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர்.

தேனி,

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று தனது கோரிக்கை மனுக்களை மூட்டை கட்டி தலையில் தூக்கி வந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 220 முறை மனு கொடுத்தும் எவ்வித தீர்வும் கிடைக்காத விரக்தியில் அவர் இந்த வினோத போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

யார் இந்த நபர்?

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 50). ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக இவரது தாத்தா, அரசுக்கு 4 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளார். அதற்கு பதிலாக வாரிசுதாரருக்கு அரசு வேலை வழங்குவதாக அப்போது அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

23 ஆண்டு கால போராட்டம்

நிலம் கொடுத்ததற்கு பதிலாக அரசு வேலை கேட்டு திருநாவுக்கரசு கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மனு கொடுத்து வருகிறார். இதுவரை ஒப்புகைச் சீட்டுடன் மொத்தம் 220 முறை மனு கொடுத்துள்ளார். இத்தனை முறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், கடும் விரக்தி அடைந்த அவர், இதுவரை தான் கொடுத்த அனைத்து மனுக்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு பெரிய மூட்டையாக கட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்து வந்துள்ளார்.

போலீசார் தடுப்பு

நுழைவு வாயிலில் தலையில் மூட்டையுடன் வந்தவரை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மூட்டையுடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறியதையடுத்து, மூட்டை மற்றும் பையை வெளியிலேயே வைத்துவிட்டு, மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அவர் மீண்டும் ஒரு மனுவை அளித்தார்.

தாத்தா கொடுத்த நிலத்திற்கு வாரிசு வேலை கேட்டு 220 மனுக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நபர் வந்த சம்பவம் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT