சென்னை,
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) நேற்று காலமானார். நல்லகண்ணுவின் உடல் மருத்துவமனையில் இருந்து தியாகராய நகர் பகுதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்திற்கு, தொண்டர்கள் புடைசூழ, ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நல்லகண்ணுவின் உடல் வைக்கப்பட்டது. முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
இன்று மாலை 3 மணி வரை நல்லகண்ணுவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று முதல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிற்பகல் 3 மணிக்கு பிறகு நல்லகண்ணுவின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தி.நகர் பாலன் இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. நல்லகண்ணுவின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டது.
இறப்புக்கு பிறகு தனது உடலை மருத்துவமனைக்கு தானமாக வழங்க நல்லகண்ணு விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது விருப்பப்படி உடல் அரசு மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டது. நல்லகண்ணுவின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தி பிரியாவிடை அளித்தனர்.