தமிழக செய்திகள்

சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்: இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி

விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழ்நாடு முழுவதும் 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

திருப்பூர்,

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

விநாயகரை வழிபடுவோம், கொரோனாவை விரட்டுவோம் என்று வருகிற 22-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வழிபட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்தஆண்டு வைக்கப்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் ஊர்வலம், பொதுநிகழ்ச்சி இருக்காது. அந்தந்த பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபடலாம். ஒவ்வொரு சிலைக்கும் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்கள் விநாயகர் சிலையை வைப்பது முதல் கரைப்பதற்கு எடுத்து செல்வது வரை அனைத்து பகுதிகளிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல அரசியல் கட்சி தலைவர்கள் மாற்று மத பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து அதில் பங்கேற்கிறார்கள். விநாயகர் சதுர்த்தியை கண்டுகொள்வதில்லை. குறிப்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா அழைப்பிதழ் அனுப்பப்படும். அவர் சென்னையில் ஏதாவது ஒரு இடத்தில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை வழிபட வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி விழாவை தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். ஏற்கனவே 3 அடி, 5 அடி, 9 அடி உயரத்தில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வர்ணம் தீட்டும் பணிகள் நடக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழா குறித்த வழிமுறைகளை அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில செயலாளர் கிஷோர்குமார் உடனிருந்தார்.

SCROLL FOR NEXT