சென்னை,
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சிவகங்கை அருகே ஆயுதப்படை பெண் காவலர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் அதிரடிப்படை வந்து விட்டது இனி பெண்கள் நிம்மதியாக இருக்கலாம் என்ற நினைப்பை தவிடு பொடியாக்கும் வகையில் கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தவெக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறது.
இந்த ஆட்சியிலும் நமக்கு விடிவு இல்லை என்று ஒவ்வொரு பெண்ணும் உணரத் தொடங்கி விட்டனர். தமிழக முதல்-அமைச்சரே நீங்கள் ஆரம்பித்து வைத்த சிங்கப்பெண் அதிரடிப்படை ஏதோ தமிழகத்தில் மாற்றம் கொண்டு வரப்போகிறது என்று நினைத்தால் வழக்கமாக காவல்துறை தன் கடமையை செய்வது போலவே இயங்குவதற்கு ஏன் சிறப்புப்படை என்ற பெயர்? இப்படி தமிழக பெண்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் தமிழக வெற்றிக் கழக அரசு தோல்வி கழக அரசாக மாறிவிடும் என்பதை நினைவில் கொண்டு பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுங்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.