கைது 
தமிழக செய்திகள்

சென்னையில் பட்டாக் கத்திகளுடன் சுற்றிய கும்பல் கைது

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 8 பட்டாக்கத்திகள் மற்றும் அரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை,

சென்னை மணலி பகுதிகளில் ஒருவரை கொலை செய்வதற்காக பட்டாக்கத்திகளுடன் சுற்றிய கும்பலை தடுத்து போலீசார் கைது செய்தனர்.

ஆயுதங்களோடு இளைஞர்கள்

சென்னை மணலி புதுநகர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் காலி மைதானம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தில் நேற்று அதிகாலையில், இளைஞர்கள் சிலர் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் நடமாடுவதைக் கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக மணலி புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

கும்பல் கைது

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 8 பேரையும் கொத்தாகப் பிடித்துக் கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் (வயது 23), ரதீஷ் (வயது 24), சந்தோஷ் (வயது 21), கிருஷ்ணன் பிரசாத் (வயது 22), சசிகுமார் (வயது 20), சஞ்சய் (வயது 23), விக்னேஷ் (வயது 24) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் என்பது தெரியவந்தது.

முன்விரோதம்

இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு கும்பலுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சமீபத்தில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது இவர்களுக்குள் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, எதிர் தரப்பைச் சேர்ந்த முகேஷ் என்ற வாலிபரைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டு, பட்டாக்கத்திகளுடன் அவர்கள் காலி இடத்தில் காத்திருந்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர்.

ஆயுதங்கள் பறிமுதல்

மேலும் அவர்களிடமிருந்து 8 பட்டாக்கத்திகள் மற்றும் அரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு, வாலிபர்கள் 7 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையிலும், 17 வயது சிறுவன் அரசு சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

போலீசாரின் இந்த விரைவான நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் மற்றும் கொலைச் சம்பவம் முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளது.