சென்னை,
தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில், மாநில மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் நலன்களுக்காக செயல்படும் இந்த வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன், நகைக் கடன் வழங்கப்படுகின்றன. இதேபோல், சுயஉதவிக் குழுக்களுக்கும் தொழில் தொடங்க கடன்கள் வழங்கப்படுகின்றன.
கடந்த 2024-25-ம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 17 லட்சத்து 37 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரத்து 500 கோடி கடன் வழங்கப்பட்டது. தற்போது, சட்டசபை தேர்தல் வந்ததால் கடன் வழங்குவதில் தாராளம் காட்டப்பட்டுள்ளது. அதாவது, 2025-26-ம் ஆண்டில் 18 லட்சத்து 55 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரத்து 100 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூ.600 கோடி அதிகம் ஆகும்.
இதேபோல், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு 2024-25-ம் ஆண்டில் ரூ.4 ஆயிரத்து 60 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன் அளவு 2025-26-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரத்து 600 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டைவிட ரூ.1,540 கோடி கூடுதலாக கடன் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிறகு ஆட்சி அமைப்பவர்கள் கூட்டுறவு வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மற்றும் சுயஉதவிக்குழுவினர் பலர் கடன் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.