கோபி,
ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் சிறுவயது முதலே தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். சிறுமியின் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அவர் வேலைக்குச் செல்லும் நேரங்களில் சிறுமியை வீட்டிற்குள் வைத்து பூட்டிச் செல்வதையும், அவ்வப்போது மது போதையில் தனது நண்பர்களுடன் வீட்டுக்கு வருவதையும் வழக்கமாக வைத்திருந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் பொதுப்பணித்துறையில் ஊழியராக வேலை பார்க்கும் ஒருவர் சிறுமியின் தந்தைக்கு மது வாங்கி கொடுத்து வீட்டுக்கு சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சில நேரங்களில் பொதுப்பணித்துறை ஊழியர் தன்னுடைய நண்பர் ஒருவரையும் உடன் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கிடையே சிறுமியின் தந்தைக்கு தெரிந்த ஒருவரும் அவ்வப்போது வீட்டுக்கு வந்து சிறுமியிடம் எல்லை மீறியுள்ளார். இதுகுறித்து சிறுமி பலமுறை தந்தையிடம் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் கடந்த மாதம் 31-ந் தேதி தந்தைக்கும், மகளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை மகள் என்றும் பாராமல் சிறுமியை வீட்டை விட்டு வெளியே போகச்சொல்லி இருக்கிறார்.
வேறு வழியில்லாமல் சிறுமி அந்த பகுதியில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். உடனே உறவினர் சிறுமியை சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தபோது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்தது.
இதுகுறித்து கோபி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா மற்றும் போலீசார் சிறுமியின் தந்தைக்கு தெரிந்த ஒருவர் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர், அவருடைய நண்பர் என 3 பேர் மீது போக்சோ சட்டத்திலும், சிறுமியின் தந்தை மீது உடந்தையாக இருந்ததாகவும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.