சென்னை,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக ராக்கெட்டுகளில் பொருத்தி விண்வெளிக்கு செலுத்தி வருகிறது.
இந்தநிலையில் இஸ்ரோ, உயர்நுணுக்கமான தகவல்தொடர்புக்கான ஜிசாட்-29 என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது. இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:- ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் 3 நிலைகளை கொண்ட ஒரு கனரக வகை ராக்கெட்டாகும். இதில் முதல் நிலைகளில் திட எரிபொருளும், 2-வது நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளன. 3-வது நிலையில் கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. 10 டன் எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், 4 டன் எடை கொண்ட செயற்கைகோளை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தும் திறன் கொண்டது.
தற்போது 3 ஆயிரத்து 423 எடை கொண்ட ஜிசாட்-29 செயற்கைகோளை சுமந்து செல்கிறது. இதில் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் அதிநவீன சக்தி கொண்ட கா.கு.பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனை பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதனுடைய ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்.