தூத்துக்குடி,
தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஆடுகள், புறாக்கள் மற்றும் பைபர் படகு ஆகியவற்றை தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் வெள்ளாடுகள் மற்றும் புறாக்கள் கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சுராஜா ஆகியோர் அடங்கிய கியூ பிரிவு போலீசார் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் நேற்று இரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த கடற்கரை பகுதியில் பதிவு எண் இல்லாத இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட பைபர் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக வெள்ளாடுகளையும் புறாக்களையும் ஏற்றிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரைக் கண்டதும் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரட்டை எஞ்சின் பைபர் படகு, அதிலிருந்த 8 வெள்ளாடுகள் மற்றும் 3 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த புறாக்களைக் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கடத்தல்காரர்களை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.