தமிழக செய்திகள்

நல்லதே நடக்கும் அனைவரும் பொறுமை காக்கவும்: எடப்பாடி பழனிசாமி

நல்லதே நடக்கும் அனைவரும் பொறுமை காக்கவும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்த சூழலில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. பக்கம் தாவாமல் இருக்க புதுச்சேரி பூரணாங்குப்பத்தை அடுத்த புதுகுப்பத்தில் உள்ள தனியார் சொகுசு தங்கும் விடுதிக்கு நேற்று இரவு வருகை தரத்தொடங்கினர். இதுவரை தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஓ.எஸ் மணியன், தளவாய் சுந்தரம், சேவூர் ராமச்சந்திரன், மோகன், சொரத்தூர் ராஜேந்திரன், அருள்மொழி தேவன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வெங்கடாசலம் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். மீதமுள்ள எம்.எல்.ஏ.க்களும் வருகை தர உள்ளனர்.

அவர்கள் இன்று மதியம் வரை ஒரு தனியார் சொகுசு தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். கோடைகாலம் என்பதால் அறைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிந்தது. எனவே தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த சொகுசு தங்கும் விடுதியில் இருந்து அதே பகுதியில் உள்ள மற்றொரு சொகுசு விடுதியை முழுவதுமாக வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அங்குள்ள அறைகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாரையும் சந்திக்கவும், தொடர்பு கொள்ளவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் நல்லதே நடக்கும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திமுகவுடன் கண்டிப்பாக கூட்டணி கிடையாது எனவும், அனைவரும் பொறுமை காக்கவும், எம்.எல்.ஏக்கள் யாரும் புதுவையில் இருந்து புறப்பட வேண்டாம்பெரும்பான்மை இல்லாத விஜய் முட்டி மோதி இங்கே வருவார். நம் தலைமையில் ஆட்சி அமையும் எனவும் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.