தமிழக செய்திகள்

அரசு பேருந்தில் அரை கிலோ மல்லிகைக்கு ரூ.13 சுமை கட்டணம் - விவசாயி பகிர்ந்த வீடியோ வைரல்

பேருந்து நடத்துநர் அரை கிலோ மல்லிகை பூவிற்கு சுமை கட்டணமாக ரூ.13 வசூலித்துள்ளார்.

மதுரை,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டியை சேர்ந்த விவசாயி சந்தோஷ் என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த மல்லிகைப்பூவில் அரை கிலோவை ஒரு பையில் போட்டு மேலூரில் விற்பனை செய்ய கொண்டு சென்றார். இதற்காக சிறுகுடியில் இருந்து மேலூர் சென்ற அரசு டவுன் பேருந்தில் ஏறினார்.

அவரிடம் இருந்த அரை கிலோ மல்லிகை பூவிற்கு ரூ.13 சுமை கட்டணமாக பேருந்து நடத்துநர் வசூலித்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர் சமூகவலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

10 கிலோ எடையுள்ள பொருட்களுக்கு மட்டுமே 13 ரூபாய் கட்டணம் வாங்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும்போது சிறிய அளவில் கொண்டு செல்லும் மல்லிகைப்பூவுக்கும் கட்டணம் வசூலிப்பதால் விவசாயிகள் வேதனை அடைகின்றனர். இது போன்று வசூலிப்பதை நிறுத்தாவிட்டால் விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.