மதுரை,
அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை கோட்ட தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கனகசுந்தர், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2019-ம் ஆண்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் அப்போதைய ஆளுங்கட்சியின் அண்ணா தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த சில டிரைவர், கண்டக்டர்கள் இதர பணி என்ற பெயரில், எந்த வேலையும் செய்வதில்லை. ஆனால், வேலை செய்ததாக வருகைப்பதிவு செய்யப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் சேர்த்து சம்பளம், படிகள் மாதம் ரூ.60 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இது கடும் நிதி நெருக்கடியில் உள்ள போக்குவரத்துக் கழகத்திற்கு மேலும் இழப்பை ஏற்படுத்துகிறது. இதர பணி என்ற பெயரில் ஆளுங்கட்சியை சேர்ந்த டிரைவர், கண்டக்டர்களுக்கு வழங்கப்படும் சலுகையை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிப திகள், அரசு போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர்களை வேறு எந்த பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. உடல்நலம் சம்பந்தப்பட்ட காரணங்களுக்காகவே மாற்றுப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.