தமிழக செய்திகள்

திருச்சியில் பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து; 12 பேர் காயம்

திருச்சியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 12 பேர் காயமடைந்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று தஞ்சை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது. இந்த பேருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒதியம் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க, பேருந்தின் ஓட்டுநர் வண்டியை இடதுபுறமாக திருப்பியுள்ளார்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் கருணாகரன், நடத்துனர் ஆறுமுகம், ரேவதி, சுஜாதா ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 8 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி தகவலறிந்த குன்னம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT