சென்னை,
அரசு மருத்துவமனைகளா அல்லது அச்சுறுத்தும் அமரர் கூடங்களா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த கவுசிக் என்ற 12 வயது சிறுவன், அங்கிருந்த மின்விளக்கு கோபுரத்தில் இருந்து பாய்ந்த மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன. உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தார் இக்கொடூர நிகழ்வில் இருந்து மீண்டு வர, இறைவன் அவர்களுக்கு துணை நிற்கட்டும்.
விஜய் தலைமையிலான அரசின் கீழ் இயங்கும், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் உயிருக்கு தான் உத்தரவாதம் இல்லையென்று நினைத்தால், உடன் செல்பவர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது என்பதை உணர்த்தும் இந்த சம்பவம், ஆளும் அரசின் நிர்வாக தோல்விக்கான மற்றுமொரு சான்று.
ஆட்சிக்கு வந்ததும் சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், கல்வி, பெண்கள் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளை சரி செய்யாமல், “ரீல்ஸ்” மோகத்தில் ஊறித் திளைக்கும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அலட்சியத்திற்கு, அப்பாவி மக்கள் பலியாக வேண்டுமா?
ஏழை, எளிய மக்களின் புகலிடமாக விளங்கும் அரசு மருத்துவமனைகளில் போதிய அடிப்படை வசதிகளும், தரமான கட்டுமானங்களும் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதை விட சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், வேறு என்ன முக்கிய வேலை இருக்கிறது? தவெக அமைச்சர்கள் எல்லாம் “ரசிகர்” மனநிலையில் இருந்து முதலில் வெளியில் வர வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் செயல்பாடுகளில் முழு கவனம் செலுத்த வேண்டும். அரசின் அலட்சியத்தால் இனியொரு உயிரை இழக்க தமிழகம் தயாராக இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.