சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், பட்டாசு விற்பனையாளர் சங்கம் தாக்கல் செய்துள்ள மனுவில், தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்காக இடம் ஒதுக்கித்தரும்படி, ஜூலை 14-ந்தேதி மற்றும் 20-ந்தேதிகளில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர், பொது மேலாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. அதன் மீது, இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை" என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், கோரிக்கை மனுக்களை பரிசீலித்து, ஐகோர்ட்டின் முந்தைய உத்தரவுகளின்படி, வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையின்போது, தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய தனியாக இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்.
வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, தீவுத்திடலில் 'தீபாவளி பட்டாசு கண்காட்சி 2026' தொடர்பான புதிய டெண்டர் அறிவிப்புகளை வெளியிடவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என வாதிடப்பட்டது. அரசு தரப்பில், ‘பட்டாசு கடைகள் ஒதுக்குவது தொடர்பாக, வருகிற 11-ந்தேதி கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்பின், மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வாதத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.