தமிழக செய்திகள்

8 வழக்குகளில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர்கள்.. கோவை கலெக்டருக்கு ரூ.56,000 அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவு

அரசு வக்கீல்கள் ஆஜராகாததால் அரசு தரப்பு சாட்சியிடம் விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

கோவை,

வழக்குகளில் அரசு வக்கீல் ஆஜர் ஆகாததால், சாட்சிகளுக்கான செலவு தொகை ரூ.56 ஆயிரத்தை கலெக்டர் மூலம் அரசு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கொலை வழக்கு விசாரணை

கோவை மாவட்டத்தில் கோர்ட்டுகளில் பணியாற்றிய அரசு வக்கீல்களின் பதவி காலம் கடந்த 30-ந்தேதியுடன் முடிவடைந்தது. புதிதாக 24 பேர் அரசு வக்கீல்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் பொறுப்பு ஏற்பதற்கான உத்தரவுகள் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அரசு வக்கீல்கள் இன்னும் பொறுப்பு ஏற்க முடியாத நிலையில் உள்ளனர். வழக்கு விசாரணைகளும் கோவை கோர்ட்டுகளில் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற்ற கொலை வழக்கு விசாரணை 5-வது கூடுதல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

ரூ.10 ஆயிரம் வழங்க உத்தரவு

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். சாட்சி சொல்வதற்காக மருத்துவர் ஒருவர் கேரளத்தில் இருந்து வந்து இருந்தார். கூடுதல் அரசு வக்கீல் ஆஜராகாததால் அரசு தரப்பு சாட்சியிடம் விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சாட்சிக்கான செலவு தொகை ரூ.10 ஆயிரத்தை கலெக்டர் மூலம் வழங்க நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.

கோவை மாவட்ட கலெக்டர்

அந்த உத்தரவில் நீதிபதி சிவக்குமார் கூறுகையில், “அரசு தரப்பின் தவறு காரணமாகவே, இந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாட்சிக்குரிய படி மற்றும் செலவை வழங்குவதற்காக, வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் ஒரு வார காலத்திற்குள் இந்த நீதிமன்றத்தில் செலுத்துமாறு கோவை மாவட்ட கலெக்டர் மூலம் அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. வழக்கு வருகிற 13-ந்தேதி தள்ளி வைக்கப்படுகிறது” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு வழக்குகள்

இதேபோல் மற்றொரு வழக்கில் சாட்சி சொல்வதற்காக திருவாரூரில் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஆஜராகி இருந்தார். மேலும் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் ஆஜராகி இருந்தனர். ஆனால் கூடுதல் அரசு வக்கீல் ஆஜராகாததால் வழக்கு விசாரணை நடைபெறவில்லை.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கிலும் நீதிபதி சிவக்குமார், அரசு தரப்பில் தவறு ஏற்பட்டதால், கோவை மாவட்ட கலெக்டர் மூலம் மாநில அரசு ரூ.9 ஆயிரம் தொகையை நீதிமன்றத்தில் ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்ததொகையில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கும் தலா ஆயிரம் ரூபாயும், சப்-இன்ஸ்பெக்டருக்கு 4 ஆயிரம் ரூபாயும் இழப்பீட்டு தொகையாக வழங்க உத்தரவிட்டுள்ளார். நேற்று மட்டும் 10 வழக்குகளில் மொத்தம் ரூ.56 ஆயிரத்தை கலெக்டர் மூலம் வழங்க நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.