திருநெல்வேலி,
பழமையான அரும்பொருட்களை அரசு அருங்காட்சியகத்திற்கு வழங்கினால் தகுந்த வெகுமதி வழங்கப்படும் என திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தை மேலும் மேம்படுத்தவும், பழமையான பண்பாட்டுச் சான்றுகளைப் பாதுகாக்கவும் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வசமுள்ள பழங்கால அரும்பொருட்களை வழங்க முன்வருமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் வரலாற்றுச் சான்றுகளையும் முன்னோர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாக்கும் முக்கிய அங்கமாகத் திகழ்ந்து வருகிறது. வரும் தலைமுறையினர் வரலாற்றுச் சிறப்புகளை அறிந்துகொள்ளும் வகையில், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் உள்ள அரிய வகை பழங்கால நாணயங்கள், சிலைகள், ஓலைச்சுவடிகள், ஆயுதங்கள், இசைக்கருவிகள் மற்றும் பழங்கால வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை அருங்காட்சியகத்திற்கு வழங்கலாம்.
இவ்வாறு அரும்பொருட்களை வழங்க விரும்புவோருக்கு தகுந்த வெகுமதி (மதிப்பூதியம்) வழங்க அரசு அருங்காட்சியகம் முன்வந்துள்ளது. இதற்கு பின்வரும் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
பழமையான அரும்பொருட்களை வைத்துள்ள பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள், தாமாக முன்வந்து அவற்றை அன்பளிப்பாகவோ அல்லது உரிய வெகுமதி பெற்றுக் கொண்டோ "காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி" என்ற முகவரியில் ஒப்படைக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.