சென்னை,
ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
ஆந்திர மாநில அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடி விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் தமிழக அரசு, ஆந்திர அரசுடன் சுமூகமாக பேசி உரிய தீர்வு காண வேண்டும்.
இலங்கை கடற்படை அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்தும் படகுகளை பறிமுதல் செய்தும் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை இழைத்து வருகிறார்கள். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடும் துயரத்திற்கு உள்ளாகின்றார்கள். அதோடு துரதிஷ்டவசமாக தற்பொழுது நமது அண்டை மாநிலமான ஆந்திர அரசும், எல்லைக்கு அருகே கடலில் மீன் பிடிக்க வரும் மீனவர்களை கைது செய்தும், மீன்பிடி விசைப்படகுகளை கைப்பற்றியும் காணொன்னா துயரத்தை ஏற்படுத்துவது மிகுந்த வருத்ததை அளிக்கிறது.
கடந்த 16.06.2026 ஆம் தேதியன்று மீன்பிடித்து கொண்டு இருந்து சென்னையை சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்தும் 7 மீன்பிடி விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இதுவரை விடுவிக்காமல் இருப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீனவர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளார்கள்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் காக்கும் வகையில் தமிழக அரசு, ஆந்திர அரசுடன் சுமூகமாக பேசி நிரந்தர தீர்வை காண வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்று ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட 7 மீன்பிடி விசைப் படகுளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.