சென்னை
அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார்.
தமிழக சட்டசபையில் கடந்த 12-ந்தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றபோது, காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ஜோதிமணி பேசினார். அப்போது அவர், நான் 280 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து இங்கு வருகிறேன். அதற்கு பயணப்படி கொடுக்கிறீர்கள். ஆனால் எனக்கு சொந்தமாக வாகனம் எதுவும் இல்லை. வாடகைக்குதான் எடுக்க வேண்டியதுள்ளது.
எனது தொகுதியில் 40 கிலோமீட்டர் சுற்றளவு பயணித்து மக்களை சந்தித்து பணிகளை மேற்கொள்வதற்கான வாகன வசதிகள் இல்லை. ஒரு உதவியாளரை வைத்துக்கொண்டு, அவருக்கு ஊதியம் கொடுக்கும் அளவுக்கு என்னிடம் வசதிகள் இல்லை. இப்படித்தான் இங்குள்ள எம்.எல்.ஏ.க்களில் முக்கால்வாசி பேர் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு கார் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும் என பேசினார்.
இந்த நிலையில், சட்டசபையில் வசதி குறைந்த மற்றும் புதிய எம்.எல்.ஏ.க்களில் எந்தெந்த எம்.எல்.ஏ.க்களுக்கு கார் உள்ளிட்ட உதவிகளை அரசால் வழங்க முடியும் என்பது குறித்து முதல்-அமைச்சர் விஜய் ஆலோசித்து வருகிறார். இது சம்பந்தமான அறிவிப்பை அவர் சட்டசபையில் வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், தமிழக சட்டசபை இன்று காலை கூடியபோது, முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது அவர், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று கூறினார். இதன்படி, அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும். தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடர்வதற்கும், அவர்கள் தங்களின் தொகுதிப்பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கும் வசதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படி எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு உதவியாளர்களை நியமிக்க மாதம் ரூ.25 ஆயிரம் படி வழங்கப்படும். ஓட்டுநர், வாகன பராமரிப்பு, எரிபொருளுக்கு மாதம் ரூ.75 ஆயிரம் படி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு த.வெ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்து பேசினர்.