தமிழக செய்திகள்

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட திருத்த மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்

தமிழ்நாடு ஊரமைப்பு சட்ட திருத்த மசோதா, தீயணைப்புத் துறை சட்ட திருத்த மசோதா, சம்பளம் வழங்கல் சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த கூட்டத் தொடரின் போது பல்வேறு சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ஒரு சில மசோதாக்கள் தவிர மற்ற மசோதாக்களுக்கு கவர்னர் அர்லேகர் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் தமிழ்நாடு ஊரமைப்பு சட்ட திருத்த மசோதா,தீயணைப்புத் துறை சட்ட திருத்த மசோதா, சம்பளம் வழங்கல் சட்ட திருத்த மசோதா, ஊராட்சிகள் 2-ம் சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (கூடுதல் பணி) சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு ஜி.எஸ்.டி. சட்டத் திருத்த மசோதா உள்பட 11 சட்ட மசோதாக்களுக்கு கவர்னரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. எனவே அந்த மசோதாக்கள், தற்போது சட்டங்களாகிவிட்டன. அவை அனைத்தும் கடந்த 15-ந் தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான நிலப்பரப்பை குறைத்து, சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்ட தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டம் தொடர்பான மசோதா, கவர்னரிடம் இருந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT