திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்த மரியராஜ் மகன் சிங்கராயர் அஜித்குமார் (வயது 21). இவர் கடந்த 8.3.2018 அன்று திண்டுக்கல்-மதுரை சாலையில் போக்குவரத்துநகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சிங்கராயர் அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவருடைய தந்தை மரியராஜ், தாயார் ஜெயக்கொடி ஆகியோர் இழப்பீடு கேட்டு, திண்டுக்கல் முதன்மை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை நீதிபதி முத்துசாரதா விசாரித்தார். மரியராஜ் தம்பதி தரப்பில் வக்கீல் மனோகரன் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மரியராஜ்-ஜெயக்கொடி தம்பதிக்கு ரூ.17 லட்சத்து 79 ஆயிரத்து 256 இழப்பீடாக வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதையடுத்து மரியராஜ்-ஜெயக்கெடி தம்பதி தரப்பில் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் கோர்ட்டு ஊழியர்கள் நேற்று திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நின்ற ஒரு அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.