விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உடையாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் ரோகிணி (14 வயது). இவர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த வயலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் வேலை செய்யாமல் ரோகிணி இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த அவரது பாட்டி சந்திரா, ஏன் எந்த வேலையும் செய்யவில்லை என கூறி ரோகிணியை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ரோகிணி விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், மாணவியை மீட்டு சிகிச்சைக்காக சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.