நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர், நிஜமாகவே நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தைத் தனது வருங்கால மனைவிக்கு திருமண பரிசாக வாங்கி, ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் அசோக் சரவணன் (வயது 32). கட்டிடப் பொறியாளரான இவருக்கும், ராதிகா (என்ற வர்ஷினி) என்ற பெண்ணுக்கும் வருகிற செப்டம்பர் மாதம் 17-ந் தேதி திருமணம் நடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தனது வருங்கால மனைவிக்கு வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பரிசை வழங்க அசோக் சரவணன் திட்டமிட்டார்.
வழக்கமாக திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு தங்க நகைகள், சொகுசு கார்கள் அல்லது பட்டு புடவைகள் வழங்குவதுதான் வழக்கம். ஆனால், அசோக் சரவணன் இந்த வழக்கமான பாணியை முற்றிலுமாக தள்ளி வைத்தார். விண்வெளியில் உள்ள நிலவில் தனது காதல் மனைவிக்கு இடம் வாங்கி தர ஆசைப்பட்டார். இதற்காக, லண்டனில் வசித்து வரும் தனது சகோதரியின் உதவியை அவர் நாடினார். அவரது வழிகாட்டுதலின்படி, சர்வதேச நிலவு நிலப் பதிவேடு இணையதளம் மூலம் ஆன்லைனில் தொடர்பு கொண்டு, நிலவில் வெற்றிகரமாக 1 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார்.
நிலா நிலத்திற்கான அதிகாரப்பூர்வ பத்திரப்பதிவு மற்றும் உரிமை சான்றிதழ்கள் லண்டனில் இருந்து அசோக் சரவணனின் கைக்கு வந்து சேர்ந்தன. இதனை தனது வருங்கால மனைவி ராதிகாவிடம் காண்பித்து அவர் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்த விபரத்தை அறிந்த உறவினர்களும், நாமகிரிப்பேட்டை பகுதி பொதுமக்களும், "இப்படியும் ஒரு காதலா!" என்று ஆச்சரியமடைந்து, புது மாப்பிள்ளையின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு தங்களின் மனமார்ந்த பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.