தமிழக செய்திகள்

குரூப் 2, 2ஏ தேர்வு குளறுபடி விவகாரம்: அலுவலர்களை சஸ்பெண்ட் செய்தது டி.என்.பி.எஸ்.சி.

தேர்வுகள் எதிர்வரும் 15.03.2026 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:-

கடந்த 08.02.2026 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தொகுதி II மற்றும் தொகுதி IIA-இல் அடங்கிய பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுகள் தொழில்நுட்ப காரணங்களால் ரத்து செய்யப்பட்டன.

இத்தேர்வுகள் எதிர்வரும் 15.03.2026 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மறுதேர்வுக்கான விவரங்கள் குறிந்து தேர்வாணையம் ஏற்கனவே பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளது.

08.02.2026 அன்றைய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் இரண்டு உதவிப்பிரிவு அலுவலர்கள் மற்றும் நிரலர்கள், இரண்டு பிரிவு அலுவலர்கள் மற்றும் ஒரு சார் செயலாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், துணைச் செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் இத்தகைய தவறுகள் நிகழாவண்ணம் கூடுதலான வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.