காரைக்குடி,
கார்த்தி சிதம்பரம் எம்.பி. காரைக்குடியில் உள்ள அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாற்றம் வரவேண்டும் என்பதற்காக தமிழக அரசு கொண்டுவந்த சட்டவடிவினை முழுமையாக வரவேற்கிறேன். இலங்கை பொருளாதார ரீதியாக தோற்றுப் போன ஒரு நாடாக தள்ளப்பட்டுள்ளது. இந்திய அரசு அவர்களுக்கு சில நிபந்தனைகளோடு உதவி செய்ய வேண்டும்.
இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு அதிக செலவுகள் ஏற்பட காரணம் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்வதே ஆகும். இது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல. உள்நாட்டு உற்பத்திகளில் கவனம் செலுத்துவதே நாட்டின் பாதுகாப்பிக்கு ஏற்றது.
சமூக வலைத்தளங்களில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. இது உண்மையானால் அரசு இதில் கவனம் செலுத்தி தேவையான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.