தமிழக செய்திகள்

ஜி.எஸ்.டி. பங்கு தொகை விவகாரம்: மத்திய அரசின் அராஜக போக்கை தடுக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

ஜி.எஸ்.டி. பங்கு தொகை விவகாரத்தில் மத்திய அரசின் அராஜக போக்கை தடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த சரக்கு மற்றும் சேவை வரிகள் மன்ற கூட்டத்தில், கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் ஏற்பட்ட நிதிபற்றாக்குறையை மாநிலங்கள் ஈடுசெய்வது குறித்து அறிவித்துள்ள திட்டங்கள் மாநில அரசுகளை திவால் நிலைக்கு தள்ளும் ஆபத்து உள்ளது.

மத்திய அரசு மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. பங்கை கொடுக்க மறுப்பதோடு, கொரோனா காலத்தில் அதிக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மாநிலங்களுக்கு உதவி செய்ய முடியாது என்று கூறி உள்ளது. ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கியோ, வேறு வகைகளிலோ மாநிலங்களுக்கு இழப்பீட்டை வழங்க வேண்டியது மத்திய அரசின் சட்டப்படியான கடமையாகும். மத்திய அரசு அதை செய்ய வேண்டும்.

மாநில அரசு, மத்திய அரசின் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக குரல் எழுப்புவதோடு, இதற்கு எதிராக போராடுகிற இதர மாநில அரசுகளோடு இணைந்து நின்று மத்திய அரசின் இந்த அராஜகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். அவசியம் ஏற்பட்டால் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.