மதுரை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் சண்முகசுந்தரம் முன்ஜாமீன் கோரி, ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு இருமுறை தள்ளுபடியானது. தனிப்படை காவலர்கள் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரிக்கவும், வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.
கூடுதல் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்ட சண்முகசுந்தரம் உட்பட 4 பேரும் நேரில் ஆஜராகுமாறு, மதுரை மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் கோர்ட்டு விசாரணைக்கு டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் ஆஜராகவில்லை. இதனையடுத்து, சண்முகசுந்தரத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மதுரை மாவட்ட மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி சி.பி.ஐ. மற்றும் தமிழக காவல்துறை இணைந்து மார்ச் 5-ந்தேதிக்குள் சண்முகசுந்தரத்தை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.