ராமநாதபுரம்,
தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதற்காக இலங்கையில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, கடந்த சில நாட்களாக தீவிர வாகன சோதனை, கண்காணிப்பு நடந்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகள் இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ளன. இதனால் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மண்டபம் யூனியன் உச்சிப்புளி அருகே கடலோர கிராமமான பிரப்பன்வலசையை சேர்ந்த பூமிநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். ராமேசுவரத்தில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்த இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர், ஏற்கனவே திருமணமானவர் என்றாலும், பிரப்பன்வலசை பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த வள்ளி (வயது 42) என்பவருடன் கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவியாக குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
இந்தநிலையில் வள்ளியின் வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக உச்சிப்புளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஒரு அட்டைப்பெட்டியில் கைத்துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தக்கூடிய தோட்டாக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் துப்பாக்கி, 32 தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார் வள்ளியை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு, மறுவிற்பனை செய்யப்பட்டது என்றும், குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்க பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
பூமிநாதனுக்கு கோவையை சேர்ந்த 3 பேர் அந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொடுத்ததாகவும், அவர் அதனை இலங்கையை சேர்ந்தவர்களுக்கு கடத்துவதற்காக வள்ளியின் வீட்டில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து வள்ளியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.