கோவை,
வீடுகளுக்கான கியாஸ் சிலிண்டர் விநியோகம் சீரடைந்தா? என்பது குறித்து இந்தியன் ஆயில் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல் இடையே தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில், ஹார்மூஸ் நீரிணை வழியாக வரும் சரக்கு கப்பல்கள் சேவை தடைபட்டது. இதனால், சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகிப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
மாதங்கள் கடந்தாலும் தற்போது வரை சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகம் சீரடையவில்லை. இந்த நிலையில், கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பாஷா என்பவர், சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகம் எப்போது சீரடையும் என்று இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு அவர் பதில் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெட்ரோலியத் துறையைப் பாதித்துள்ள தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, வீட்டு உபயோக நுகர்வோருக்குத் தடையின்றி சமையல் கியாஸ் சிலிண்டர் கிடைப்பதை உறுதிசெய்ய எண்ணெய் நிறுவனங்கள் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
விநியோக தளவாடங்களை உன்னிப்பாகக் கண்காணித்தல், சுத்திகரிப்பு நிலைய உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு உள்ளிருப்புகளை சரியாகப் பகிர்ந்தளித்தல் ஆகியவை இதில் அடங்கும்.
இதன் காரணமாக, தற்போது வீட்டு உபயோக நுகர்வோருக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது. மேலும், வீட்டு உபயோக நுகர்வோருக்கு முன்னுரிமை அளித்து தடையின்றியும் சரியான நேரத்திலும் சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
கூடுதலாக, அனைத்து நுகர்வோருக்கும் சமமான முறையில் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யவும், உண்மையான தேவையை பூர்த்தி செய்யவும், வீட்டு உபயோக எல்.பி.ஜி. முன்பதிவுக்கான கால இடைவெளியில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்குப் பிறகும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்குப் பிறகும் அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்துகொள்ளலாம். பொதுமக்கள் பதற்றத்தில் தேவையின்றி முன்பதிவு செய்வதைத் தடுப்பதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும். நிலவி வரும் சர்வதேச அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே இந்த முன்பதிவுக் கட்டுப்பாடுகள் தற்காலிகமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.
சிலிண்டர் விநியோகத்திற்கும் அடுத்த முன்பதிவுக்கும் இடையே 25 மற்றும் 45 நாட்கள் இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ளதற்கான காரணம், பொதுமக்களின் சராசரி பயன்பாட்டு முறை மற்றும் சமச்சீரான விநியோகத் தேவையின் அடிப்படையில் அமைந்தது.
அ) கிராமப்புறங்களைப் பொறுத்தவரை, நிர்ணயிக்கப்பட்டுள்ள 45 நாட்கள் முன்பதிவு இடைவெளியின்படி, ஒரு நுகர்வோர் ஆண்டிற்கு அதிகபட்சமாக சுமார் 8 சிலிண்டர்கள் வரை பெற முடியும். எனினும், 2025–26 நிதியாண்டில் கிராமப்புற நுகர்வோரின் உண்மையான தனிநபர் பயன்பாடு (14.2 கிலோ சிலிண்டர் கணக்கீட்டின்படி) ஆண்டிற்குச் சராசரியாக 5.07 சிலிண்டர்களாக மட்டுமே இருந்தது. இது அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள்ளேயே உள்ளது.
ஆ) நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை, நிர்ணயிக்கப்பட்டுள்ள 25 நாட்கள் முன்பதிவு இடைவெளியின்படி, ஒரு நுகர்வோர் ஆண்டிற்கு அதிகபட்சமாக சுமார் 14 சிலிண்டர்கள் வரை பெற முடியும். 2025–26 நிதியாண்டில் நகர்ப்புற நுகர்வோரின் உண்மையான தனிநபர் பயன்பாடு ஆண்டிற்குச் சராசரியாக 6.41 சிலிண்டர்களாக மட்டுமே இருந்தது. இதுவும் அனுமதிக்கப்பட்ட வரம்பை விடக் கணிசமாகக் குறைவாகும்.
எனவே, நுகர்வோரின் தற்போதைய பயன்பாட்டு முறைகள், சமச்சீரான விநியோகம், நிறுவனத்தின் செயல்பாட்டுத் தேவைகள் மற்றும் முறையற்ற அல்லது அளவுக்கு அதிகமான முன்பதிவுகளைத் தடுப்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த மறுபதிவு இடைவெளிகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.