தமிழக செய்திகள்

வாழ்ந்தது நூறாண்டு; அவரை மறக்காது இந்த நூற்றாண்டு... நல்லகண்ணு மறைவுக்கு வைரமுத்து இரங்கல்

நல்லக்கண்ணு மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நல்லக்கண்ணு மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தோழர் நல்லகண்ணு

மறைந்துவிட்டார்

சிவப்புக் கட்சியின்

கறுப்பு காந்தி இறந்துவிட்டார்

எழுந்தாலும் விழுந்தாலும்

கடலின் புகழ்பாடும் அலைபோல,

கம்யூனிஸ்ட் கட்சியின்

ஏற்றத்திலும் இறக்கத்திலும்

செங்கொடி சுமந்த

சிங்கம் அவர்

கம்யூனிஸ்ட் அல்லாதவர்களும்

கம்யூனிஸ்ட் கட்சியின்மீது

கொண்டிருக்கும் மதிப்புக்கு

நல்லகண்ணுவின்

வாழ்க்கைமுறை ஒரு காரணம்

சுதந்திர இந்தியாவில்

தடைசெய்யப்பட்ட

கம்யூனிஸ்ட் கட்சி

இன்றுவரை

உயிர்ப்போடு இருப்பதற்கு

நல்லகண்ணு போன்றோரின்

தியாகமே காரணம்

செயற்கை நுண்ணறிவு

எதிர்காலத்தில்

இறந்தவர்களை மீட்டுருவாக்கும்

தொழில்நுட்பம் கண்டறிந்தால்

நல்லகண்ணுவின் மீட்பையே

நாடு கேட்கும்

அவர் வாழ்ந்தது

ஒரு நூறாண்டு;

அவரை மறக்காது

இந்த நூற்றாண்டு

அவருக்கு

என் செவ்வணக்கம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.