கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக வாக்குகளைப் பதிவு செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் - ராமதாஸ்

ஆர்வத்துடன் வாக்களித்த பொதுமக்கள் ஒவ்வொருவரும் சமூக மாற்றத்திற்கான உன்னதமான பணியைச் செய்திருக்கிறீர்கள் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அன்பார்ந்த தமிழக மக்களே, என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! நடந்து முடிந்த தேர்தலில், ஜனநாயகக் கடமையை ஆற்றி, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசியலில் அறத்தையும், நீதியையும் குழிதோண்டிப் புதைக்க நினைக்கும் தீய சக்திகளுக்கும், துரோகத்தை ஆயுதமாகக் கொண்டவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற உழைக்கும் மக்களின் எண்ணத்திற்கு கிடைத்த வெற்றியாகவே இந்தத் தேர்தலைப் பார்க்கிறேன்.

சமூக நீதிக்காக வாழ்நாள் முழுவதும் போராடி வரும் எனது வேண்டுகோளை ஏற்று, நான் கைகாட்டிய வேட்பாளர்களுக்கு ஆதரவு தந்து வெற்றிக்கு வித்திட்ட வாக்காளர் பெருமக்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அதேபோல், பொதுவாக ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு, வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வந்து வாக்களித்த பொதுமக்கள் ஒவ்வொருவரும் சமூக மாற்றத்திற்கான உன்னதமான பணியைச் செய்திருக்கிறீர்கள்.

எங்கள் வேட்பாளர்களின் வெற்றிக்காகக் களத்தில் இரவு பகல் பாராமல் உழைத்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தோழர்களின் அர்ப்பணிப்பு அளப்பரியது. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை ஏற்று, நீங்கள் வழங்கிய இந்த பேராதரவு எங்களை மேலும் உத்வேகத்துடன் மக்கள் பணியாற்றிடத் தூண்டுகிறது. வெற்றி - தோல்விகளுக்கு அப்பால், பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும், மாநில முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து சமரசமின்றி குரல் கொடுக்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தைக் காக்கப் போராடிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது சிரம் தாழ்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.