தமிழக செய்திகள்

வெப்ப அலை: மதியம் 12 முதல் 3 மணி வரை தூய்மை பணியாளர்களுக்கு கட்டாய ஓய்வு- கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு

செங்கல் சூளை, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை மதியம் 12 முதல் 3 மணி வரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது என கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா அறிவுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் மே 4 முதல் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், வெப்ப அலை பாதிப்புகளைத் தவிர்க்கவும் மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வெப்ப அலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர்களின் நலன் காக்க கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பின்வரும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்:

மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சிப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் காலை 11:45 மணிக்குள் பணிகளை முடிக்க வேண்டும்.

நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்குப் பணியிலிருந்து விலக்கு அளித்து, கட்டாய ஓய்வு வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு தேவையான கையுறைகள், தொப்பிகள் உள்ளிட்ட உபகரணங்களை அந்தந்த துறைகள் வழங்க வேண்டும். செங்கல் சூளை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களையும் மதியம் 12 முதல் 3 மணி வரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்கள்:

தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். ORS கரைசல், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்ள வேண்டும். தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து மிக்க பழங்களைச் சாப்பிட வேண்டும். மெல்லிய பருத்தி உடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும்போது குடை, தொப்பி அல்லது காலணிகளைத் தவிர்க்காமல் பயன்படுத்த வேண்டும். முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

மதியம் 12 மணி முதல் 3 மணி வரை அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெப்பமான நேரங்களில் கடினமான உடல் உழைப்பு மற்றும் பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். மது, காபி, தேநீர் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்; இவை உடலில் நீர் இழப்பை அதிகரிக்கும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்குள் குழந்தைகள் அல்லது செல்லப் பிராணிகளைத் தனியே விடக்கூடாது.

நிர்வாக நடவடிக்கைகள்:

பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து ORS கரைசல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களை வெயிலில் நிற்கவோ, மைதானத்தில் விளையாடவோ அனுமதிக்கக்கூடாது. அங்கன்வாடிகளுக்கு விடுப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் வெப்ப அலை பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தனிப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ORS பாக்கெட்டுகள் இலவசமாகக் கிடைக்கும். ஆட்டோக்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தத் துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

வெப்ப அலை தொடர்பான அவசர உதவிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் 1077 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி முதல்வர் லியோ டேவிட் உள்ளிட்ட அரசுத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.