தமிழக செய்திகள்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நேற்று (செப்.17) மாலை வினாடிக்கு 10,000 கன அடியாக இருந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.

பென்னாகரம்,

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டுலு, ராசிமணல், அஞ்செட்டி, கேரட்டி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் வந்த தண்ணீர், நேற்று படிப்படியாக அதிகரித்து மாலை நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியானது.

இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (செப்.18) காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

6-வது நாளாக தடை

இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செந்நிறத்தில் கொட்டி வருகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை இன்று 6-வது நாளாக நீடிக்கிறது. இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று வருகின்றனர்.

SCROLL FOR NEXT