சென்னை,
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அரபிக்கடலில் உருவாகி இருக்கும் புயல் சின்னம் காரணமாகவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கும் மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்க கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், தமிழக கடலோரத்தில் 26 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து பருவ மழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, உதயகுமார், விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் மிகவும் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வது, சாலைகளில் விழும் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்துவது உள்ளிட்ட மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக எந்த நேரத்திலும் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நிவாரணப் பணிகளை விரைந்து செய்வது குறித்து அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
தொடர் மழையால் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ஏரிகள்-குளங்கள், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதிகாரிகள் அந்த நீர்நிலைகளை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இவை தவிர மழைக்கால நோய்கள் தடுப்பு பற்றியும் கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.