தமிழக செய்திகள்

மதுரையில் ரூ.3 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா, சிகரெட் பறிமுதல்: தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்தவர் கைது

காயல்பட்டினத்தை சேர்ந்த நபர், தாய்லாந்தில் இருந்து இலங்கை வழியாக விமானத்தில் மதுரைக்கு உருமாற்றம் செய்யப்பட்ட உயர்ரக கஞ்சா, சிகரெட்டுகள் கடத்தி வந்ததும் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்தது. அதிலிருந்து வெளியேறிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்த பயணியின் உடைமையில் 6 பாக்கெட்டுகளில் பச்சை நிறத்தில் வித்தியாசமான பொருள் இருப்பதை அதிகாரிகள் பார்த்தனர். சந்தேகமடைந்த அதிகாரிகள் கேட்டபோது, பயணி முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.

இதையடுத்து அதிகாரிகள் அந்த பொருளை சோதனை செய்ததில், அது உருமாற்றம் செய்யப்பட்ட உயர்ரக கஞ்சா என்பதும், ரூ.60 ஆயிரம் மதிப்பிலான உயர்ரக சிகரெட்டுகளும் இருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தை சேர்ந்த அலி அப்துல்காதர் (வயது 52) என்பதும், தாய்லாந்தில் இருந்து இலங்கை வழியாக விமானத்தில் மதுரைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அலி அப்துல்காதரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து அவரிடமிருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா மற்றும் சிகரெட்டுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். 

SCROLL FOR NEXT