தமிழக செய்திகள்

இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து மக்கள் கட்சி சார்பில், வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜாராம், ஒன்றிய தலைவர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி தலைவர் மோகன் வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலாளர் மலைக்கோட்டை தர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

வேல்வார்கோட்டை ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டம், தனியார் நூற்பாலைகளில் வசூலித்த தொழில் வரி, ஊராளிபட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டியது ஆகியவற்றில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் அந்த ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முடிவில் வடமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தியிடம், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு கொடுத்தனர்.

SCROLL FOR NEXT