ராமநாதபுரம்,
தமிழகம் முழுவதும் தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இதேபோல் இன்றும் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர்.
பின்னர் கோவிலில் சுவாமி மற்றும் அம்பாள் சன்னதியில் ரூ.100, ரூ.200 சிறப்பு கட்டண தரிசன பாதை மற்றும் இலவச தரிசன பாதையிலும் 3 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ராமேசுவரம் கோவிலில் 4 ரத வீதி, அக்னி தீர்த்த கடற்கரை பகுதி என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது.
இதேபோல் ராமேசுவரம் நகர் பகுதியில் உள்ள ராமர் பாதம், லட்சுமணேசுவரர் கோவில், ராமர் கோவில், கோதண்ட ராமர் கோவில், தனுஷ் கோடி, பாம்பன் ரோடு பாலம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
கோடை விடுமுறையை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் சீதா தீர்த்தம் சாலையில் இருந்து ராமர் தீர்த்தம், திட்டக்குடி சந்திப்பு, தனுஷ்கோடி செல்லும் சாலை, கோவில் செல்லும் சாலை வரையிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றபடி ஒன்றன்பின் ஒன்றாக சென்றன. நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.