தென்காசி,
குற்றாலம் அருவிகளில் தற்போது தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வேன், பஸ், கார்களில் தங்களது குடும்பத்துடன் குற்றாலத்தில் குவிந்தனர்.
அவர்கள் அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். குறிப்பாக ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் குளித்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் பாதுகாப்பு பணியிலும் அதிக அளவில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். குற்றாலம் பகுதியில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளுக்கும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றதால் அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.