தென்காசி,
தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்வீழ்ச்சிகள், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
முக்கிய சுற்றுலாத்தலமான குற்றால அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
இன்று விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். ஐந்தருவி, மெயின் அருவி பழைய குற்றால அருவிகளில் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.
அருவிகளில் குளித்த சுற்றுலா பயணிகள் அருவிக்கரை பகுதியில் உள்ள கடைகளில் தேநீர், தின்பண்டங்களை வாங்கி ருசித்தனர். இதனால் கடைகளிலும் வியாபாரம் சூடுபிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.