சென்னை,
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததையடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, நாமக்கல், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 20 மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 1,805 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.
குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலை சூழ்ந்தபடி வெள்ளம் செல்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மெயின் அருவிக்கரையில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் பாதை சேதம் அடைந்து உள்ளது. பெண்கள் உடை மாற்றும் அறையில் ஒரு சுவரும் சேதமடைந்தது.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை இடைவிடாது மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தென்பெண்ணையாறு, கெடிலம், செங்கால் ஓடை, பரவனாறு ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதற்கிடையே குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் கல்குணம் பகுதியில் உள்ள செங்கால் ஓடையின் குறுக்கே அமைந்துள்ள கல்குணம்- திருவெண்ணெய்நல்லூர் இணைப்பு தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய அடைமழை பெய்தது. தொடர்ந்து, நேற்றும் நீடித்த இந்த மழை காலையில் இருந்து மாலை வரை விட்டு விட்டு சாரல் மழையாக தூறிக்கொண்டே இருந்தது.
கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது
புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் புதுக்கோட்டை சாந்தநாத சாமி கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. பல்வேறு இடங்களில் குடிசைகள் சேதமடைந்தன, ஆடு, மாடுகள் இறந்தன.
பயிர்கள் நாசம்
தஞ்சை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். பல இடங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நாகை மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் முழ்கின. இதேபோல் திருவாரூர், மயிலாடுதுறையிலும் மழை கொட்டி தீர்ந்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதில் சிக்கிய 2 காவலாளிகளை தீயணைப்பு படையினர் மீட்டனர். மேலும் பள்ளி கட்டிடத்தின் மீது மரம் சாய்ந்து விழுந்தது.