சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று சந்தித்து பேசினார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பெ.சண்முகம் கூறியதாவது:-
மேகமலை, கரூர் இனாம் நிலத்திற்கான தடை உத்தரவு குறித்து முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தினேன். நிலப்பிரச்சினைகளை தீர்வு காண தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். மேகமலையில் கிராம மக்களை வெளியேற்றக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை என சொல்வதை ஏற்க முடியாது. தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். வன உரிமை, நில உரிமை வழங்கப்பட வேண்டும்.
இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதை இடதுசாரிகள் சேர்ந்து தீர்மானிப்போம். குதிரை பேரத்தில் யார் ஈடுபட்டாலும் அது கடுமையான கண்டனத்துக்குரிய விஷயம். குதிரை பேரம் விவகாரத்தில் மக்களுக்குதான் கோபம் வரவேண்டும்.
தொகுதி மக்கள் குதிரை பேரம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும். 20 நாட்கள் அல்லது ஒரு மாதத்தில் ஏன் ராஜினாமா செய்கிறீர்கள் என மக்கள் கேள்வி எழுப்பினால் எம்.எல்.ஏ.க்கள் யோசிக்க ஆரம்பிப்பார்கள். குதிரை பேரம் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். இதை திமுக, தவெக என அனைவருக்கும் தான் சொல்கிறோம்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்களை வளைத்து கட்சிகளை உடைத்து பாஜக தனது பலத்தை அதிகரித்துக் கொள்கிறது. ஆனால், இங்கே இவர்கள் (அதிமுக) ராஜினாமா செய்துவிட்டுத்தான் வேறு கட்சியில் இணைந்துள்ளனர். அதோடு, அதிமுகவில் உட்கட்சி பிரச்சினையும் உள்ளது. அதையும் இதையும் சம்பந்தப்படுத்தக் கூடாது.
தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கட்டாயம் இடம்பெறாது. கிருஷ்ணகிரி மண்ணிலிருந்து ஒருவர் அமைச்சராக வருவார் என இந்திய கம்யூ. மாநிலச் செயலர் வீரபாண்டியன் நேற்று கூறினார்; எதன் அடிப்படையில் கூறினார் என அவரிடம் இன்று கேட்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.