சென்னை,
தவெக எம்.எல்.ஏ வை பேரம் பேசி ஆட்சி கவிழ்க்க முயன்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது. 25 ஆயிரம் ரூபாய் சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும், மறு உத்தரவு வரும் வரை காலையும், மாலையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
இதற்கிடையே, போலீசார் தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணையின்போது, “முன் ஜாமின் வழங்கப்பட்டு இதுவரை இருவரும் சரணடையவில்லை; சரணடையாத பட்சத்தில் துன்புறுத்தக்கூடாது என எப்படி கோர முடியும்? என நீதிபதி கேள்வி எழுப்பியதுடன், இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், பிணைத்தொகை செலுத்துவதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு இன்று வருகை தந்தார். தனது வழக்கறிஞர்களுடன் செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன.