சென்னை
தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டு வருகிறது. எனினும், பெரும்பான்மையை (118 எம்.எல்.ஏ.க்கள்) நிரூபிக்க வேண்டிய சூழல் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்யை சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர். இதனால், 113 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. கைவசம் உள்ளனர். இந்த நிலையில், த.வெ.க. ஆட்சியமைக்க சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.
எனினும், அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம். அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம் என்றும் தெரிவித்தன. இதனால், தலா 2 எம்.எல்.ஏ.க்கள் என இந்த எண்ணிக்கை 117 எம்.எல்.ஏ.க்களாக உயர்ந்துள்ளது. வி.சி.க. இன்று முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஆதரவு கிடைக்கும்போது, த.வெ.க.வின் மொத்த பலம் 119 ஆக இருக்கும்.
ஆனால், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்வது, தற்காலிக சபாநாயகர் ஆகியவற்றால், 2 எண்ணிக்கை குறைந்து, த.வெ.க.விடம் 117 என்ற எண்ணிக்கையே இருக்கும். பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதலாக ஒரு எம்.எல்.ஏ.வின் ஆதரவு தேவையாக உள்ளது.
இதனால், விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், நள்ளிரவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்கள் மாளிகைக்கு சென்று கவர்னரை நேரில் சந்தித்து பேசினார்.
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்க ஆதரவளிப்பதாக மன்னார்குடி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் கடிதம் அளித்துள்ளார். அதனை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கவர்னரை நேரில் சந்தித்து வழங்கினார்.
இந்த நிலையில், கடிதம் அளித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். அ.ம.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவு எங்களுக்கு உள்ளது என்று கவர்னரிடம், த.வெ.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜை காணவில்லை. அவர் விலை போய் இருக்கலாம் என்றார். விஜய் பதவி வெறியில் இருக்கிறார். த.வெ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்றும் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சூழலில், அ.ம.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ் மக்கள் மாளிகைக்கு வந்துள்ளார். இதனை தொடர்ந்து, டி.டி.வி. தினகரன் மீண்டும் மக்கள் மாளிகைக்கு சென்று கவர்னரை நேரில் சந்தித்து பேசினார். இதனால், நள்ளிரவில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
காமராஜை தொடர்பு கொள்ள முடியவில்லை என டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில், அவர்கள் இருவரும் மக்கள் மாளிகைக்கு சென்றனர். காமராஜை காணவில்லை என கவர்னரிடம் புகார் அளித்திருந்த நிலையில், இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது, டி.டி.வி. தினகரன் கூறும்போது, கவர்னரிடம் கொடுத்த கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை. அந்த கடிதம் போலியானது. த.வெ.க. சார்பில் காமராஜ் பெயரில் கவர்னருக்கு வாட்ஸ்அப் மூலம் போலி கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது என கூறினார். ஒரேயொரு எம்.எல்.ஏ. எங்களிடம் உள்ளார்.
அதனால், கட்சி தாவல் தடை சட்டம் செல்லாது என்று இதுபோன்று செயல்படுகிறார்கள் என்றார். த.வெ.க. சார்பில் கவர்னரிடம் வாட்ஸ்அப் மூலம் கடித நகல் கொடுக்கப்பட்டு உள்ளது. உண்மை கடிதம் எங்கே? என கவர்னர் தரப்பில் கேட்கப்பட்டதற்கு, பின்னர் வந்து தருகிறோம் என கூறியுள்ளனர். இதுதொடர்பாக கவர்னர் தரப்பில் இருந்து, எங்களிடம் கேட்கப்பட்டது. இதனை அறிந்து எங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது என்றார்.
த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தவர்களின் பின்புலம் பற்றி விசாரிக்கும்படி புகார் அளிப்பேன். தமிழகத்தில் குதிரை பேரம் நடக்கிறது என்று கவர்னர் சந்தேகிக்கிறார் என்றார். போலி கடிதம் கொடுத்து மோசடி நடந்திருக்கிறது என்றும் டி.டி.வி. தினகரன் கூறினார். இதேபோன்று எம்.எல்.ஏ. காமராஜும், நான் அ.தி.மு.க.வையே ஆதரிக்கிறேன் என்று கூறினார்.
கடிதத்தில் உள்ளது என்னுடைய கையெழுத்து இல்லை என்று மறுத்துள்ளார். இந்த நிலையில், த.வெ.க. தரப்பில் போலி கடிதம் தயாரிக்கப்பட்டு உள்ளது என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. போலி கடிதம் கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கிண்டி காவல் நிலையத்தில் டி.டி.வி. தினகரன் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு வீடியோ வெளியிட்டு த.வெ.க. பதிலளித்து உள்ளது. அ.ம.மு.க. எம்.எல்.ஏ. சுய நினைவுடன்தான் கடிதம் கொடுத்துள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளரின் ஒப்புதலுடன், அவர் தன்னிச்சையாக மற்றும் மகிழ்ச்சியுடன் த.வெ.க.வுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கடிதம் எழுதினார்.
யாருடனும் பேரம் பேச வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. இதனை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என கூறி, காமராஜ் கடிதம் கொடுத்த வீடியோ ஒன்று த.வெ.க. தரப்பில் வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், காரில் அமர்ந்தபடி கடிதத்தில், காமராஜ் கையெழுத்திடும் காட்சிகள் உள்ளன. த.வெ.க.வுக்கு எதிராக டி.டி.வி. தினகரன் கூறிய குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. உண்மையை மறைத்து விட்டு பொய்யான தகவலை அவர் பேசி வருகிறார் என்றும் த.வெ.க. தெரிவித்து உள்ளது. இதனால், இந்த விவகாரம் பரபரப்பு அடைந்துள்ளது.
இந்த குதிரை பேர குற்றச்சாட்டால், தமிழகத்தில் 3 ஆண்டு கால ஜனாதிபதி ஆட்சி நடப்பதற்கான சாத்தியம் உள்ளது. அதற்கான காரணங்களை பார்ப்போம். தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது.
ஆனால் விஜய்யிடம் எந்த பெரும்பான்மையும் இல்லை. விஜய் ஆட்சி அமைப்பதை நான் தடுப்பதாக எப்படி சொல்ல முடியும்? விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அடுத்த 2 அல்லது 3 நாட்களில் முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்த கட்ட முடிவுகள் குறித்து ஆலோசிப்பேன் என்றார்.
குதிரை பேரத்திற்கு அனுமதி அளிக்கமாட்டேன் என்றும் கவர்னர் கூறியிருந்த நிலையில், குதிரை பேர குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. டி.டி.வி. தினகரனின் குற்றச்சாட்டு அடிப்படையில், அந்த எம்.எல்.ஏ.வை குதிரை பேரத்தில் இழுக்க முயற்சித்ததற்கான சான்றுகள் நிரூபிக்கப்பட்டால், அது த.வெ.க.வுக்கு எதிராக திரும்பும்.
இதனை குறிப்பிட்டு கவர்னர் அர்லேகர், ஜனாதிபதிக்கு கடிதம் எழுத முடியும். தமிழகத்தில் அசாதாரண சூழல் உள்ளது என்றும், குதிரை பேரம் நடக்கிறது என்றும் கூறி, ஜனாதிபதிக்கு கவர்னர் கடிதம் எழுதும் அதிகாரம் உள்ளது.
எனினும், சுய நினைவுடன் கடிதம் கொடுத்திருக்கிறேன் என எம்.எல்.ஏ. கூறினால், இந்த புகார் பலமற்று போய் விடும். அதனுடன், 3-ல் 2 பங்கு ஆதரவு என்ற அடிப்படையில் பார்க்கும்போது, அந்த ஒரேயொரு எம்.எல்.ஏ. த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது 100 சதவீத ஆதரவு என்ற வகையிலேயே இருக்கும். அதனால், கட்சி தாவல் தடை சட்டம் செல்லாது. அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியாது.
ஆனால், அந்த எம்.எல்.ஏ. தலைமறைவாகும் பட்சத்தில், இது குதிரை பேரம் என கவர்னர் தரப்பில் வலுவாக கூறுவதற்கான காரணியாக அமைந்து விடும். இதனால், தமிழகம் டெல்லியின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல வழிவகுத்து விடும். அதன்பின்னர் தமிழகத்தில் 6 மாத காலம் ஜனாதிபதி ஆட்சி அமலாவதற்கான சாத்தியம் ஏற்பட்டு விடும்.
அந்த ஜனாதிபதி ஆட்சியை 6 மாதங்களுக்கு ஒரு முறை மத்திய அரசு நீட்டிக்க செய்ய முடியும். அல்லது தேர்தல் நடத்தவும் முடியும். இந்த ஜனாதிபதி ஆட்சியை 6 மாதங்களுக்கு ஒரு முறை நீட்டித்து, 3 ஆண்டுகள் வரை டெல்லியின் கட்டுப்பாட்டிலேயே தமிழ்நாட்டை வைத்திருப்பதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. அதன்பின்பு, தேர்தல் நடத்தி கொள்ளலாம்.
இதுதவிர, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான காலக்கெடு 10-ந்தேதி வரையே உள்ளது. அப்படி நிரூபிக்கப்படாமல் போனால், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் முடிவை கவர்னர் எடுப்பதற்கான சூழலும் உள்ளது. அதனால், எப்படி போனாலும் 48 மணிநேர காலஅளவே இன்னும் கட்சிகளின் கைவசம் உள்ளது. அதற்குள் சுமுக தீர்வு ஏற்பட்டால் தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கும். அப்படி இல்லையென்றால், ஜனாதிபதி ஆட்சி அமைவதற்கான சாத்தியம் அதிகரித்து காணப்படுகிறது.