சென்னை,
மதச்சார்பற்ற சமூகநீதி கூட்டணி என எப்படி அழைக்க முடியும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டிற்கான இடைத்தேர்தலை முன்னிட்டு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என்று ஒரு கூட்டணியை அறிவித்திருக்கிறார்கள். ஆனால், IUML போன்ற கட்சிகளை கூட்டணியில் வைத்துக்கொண்டு, இதை எப்படி “மதச்சார்பற்ற கூட்டணி” என்று அழைக்க முடியும்? மதச்சார்பின்மை என்பது பெயரில் வைத்துக்கொள்ளும் அடையாளமல்ல; அனைத்து மதங்களையும் சமமாக அணுகும் கொள்கையாக இருக்க வேண்டும்.
காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேசிய அளவில் I.N.D.I.A. கூட்டணியில் இருக்கின்றனவா, இல்லையா? மாநிலத்திற்கு ஒரு கூட்டணி, தேசிய அளவில் வேறு கூட்டணி - ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்ற நிலைப்பாடா? அதிலும், “பிரதமர் வேட்பாளர் யார்?” என்ற கேள்விக்குக்கூட பதில் சொல்ல காங்கிரஸ் தயங்குகிறது. மாணிக்கம் தாகூர் போன்ற தலைவர்களே தெளிவான பதிலைச் சொல்ல முடியாத நிலை, காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் முதுகெலும்பு இல்லாததை வெளிப்படுத்துகிறது.
இலங்கைத் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட காலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சித்தவர்கள் வைகோவும் திருமாவளவனும். இன்று அதே காங்கிரஸுக்கு ஆதரவாக நிற்பது ஏன்? அன்று கொள்கை, இன்று கூட்டணி அரசியலா? “மாநில உரிமைக்காக இந்தக் கூட்டணி” என்று கூறுகிறார்கள். ஆனால், தமிழகத்தின் முக்கியமான மாநில உரிமையான காவிரி நீர் உரிமையையே காங்கிரஸால் தமிழகத்திற்கு உறுதியாகப் பெற்றுத்தர முடியவில்லை. அப்படியிருக்கும்போது, மாநில உரிமையை காப்பாற்றுவோம் என்று எப்படி மக்களிடம் கூற முடியும்?
ஆக, இது உண்மையில் மதச்சார்பற்ற கூட்டணியா? சமூகநீதிக் கூட்டணியா? மாநில உரிமைக்கான கூட்டணியா? என்ற கேள்விகளுக்கு அவர்களிடமே தெளிவான பதில் இல்லை. கொள்கையில் குழப்பம், கூட்டணியில் குழப்பம், பிரதமர் வேட்பாளரில் குழப்பம், மாநில உரிமையில் தோல்வி ஒட்டுமொத்தமாக இது ஒரு “குழப்பமான கூட்டணி”. எனவே, இதை “மனிதாபிமானமற்ற, சமூகநீதியற்ற, கொள்கையற்ற குழப்பக் கூட்டணி” என்றுதான் மக்கள் பார்க்க வேண்டியிருக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.