தமிழக செய்திகள்

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது எப்படி...?

தவெக அரசு 13-ந் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

சென்னை,

தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவி ஏற்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர். ஆனால் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியுடன் த.வெ.க. அரசு தனது பயணத்தை தொடங்கிவிட முடியாது. 2 முக்கிய கட்டங்களை கடந்த பிறகுதான் ஆட்சியை தொடங்க முடியும்.

த.வெ.க. அரசு 13-ந் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதால் உடனடியாக சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலை நடத்த வேண்டும். சபாநாயகர் ஒருவரை அரசு முன்மொழிந்த பிறகு, அவருக்கு எதிராக வேறொரு வேட்பாளரை எதிர்க்கட்சிகள் நிறுத்தினால், போட்டி நிலவும். அப்போது எண்ணிக் கணிக்கும் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர் சபாநாயகராக அறிவிக்கப்படுவார்.

போட்டியில்லாவிட்டால், அரசால் அறிவிக்கப்பட்ட சபாநாயகரின் இரு கைகளையும் முதல்-அமைச்சர் விஜயும், எதிர்க்கட்சித் தலைவரும் பிடித்து சபாநாயகர் இருக்கையில் அமர வைப்பார்கள். அதைத் தொடர்ந்து அன்றோ அல்லது மற்றொரு நாளிலோ (13-ந் தேதிக்குள்) அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படும். இந்த தீர்மானத்தை ஆளும் கட்சியில் இருந்து ஒருவர் முன்மொழிய, அதன் மீது முதல்-அமைச்சர் விஜய் உரையாற்றி அனைவரது நம்பிக்கையையும் கோருவார். அதில் எதிர்க்கட்சியினரும் உரையாற்றுவார்கள்.

அதன் பிறகு அந்த தீர்மானம் எம்.எல்.ஏ.க்களின் வாக்கெடுப்புக்கு விடப்படும். எதிர்க்கட்சியினர், எண்ணிக் கணிக்கும் டிவிஷன் முறைப்படி வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என்று கேட்டால், அந்த வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிட வேண்டும். அவைக்கு வெளியே எம்.எல்.ஏ.க்கள் சென்றிருந்தால் அவர்களை அவைக்குள் வரச் செய்வதற்கான மணியோசை 3 முறை ஒலிக்கப்படும்.

அதன் பின்னர் அவையின் அனைத்து கதவுகளும் அடைக்கப்படும். பின்னர் சட்டசபை செயலாளர், டிவிஷன் வாக்கெடுப்பை நடத்துவார். ஒவ்வொரு டிவிஷனிலும் உள்ள (மொத்தம் 6 டிவிஷன்) எம்.எல்.ஏ.க்களிடம் சட்டசபை செயலாளர், தீர்மானத்தை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் தனித்தனியாக எழுந்து நிற்கக் கூறுவார். (முதல்-அமைச்சர் முதல் டிவிஷனில் இருப்பார், அவருக்கு நேர் எதிரேயுள்ள 6-ம் டிவிஷனில் எதிர்க்கட்சித் தலைவர் இருப்பார்).

அந்த வகையில், அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரிப்போரின் எண்ணிக்கையையும், எதிர்ப்போரின் எண்ணிக் கையும் கணக்கிட்டு சபாநாயகரிடம் செயலாளர் வழங்குவார். அதன்படி வெற்றி, தோல்வியை சபாநாயகர் அறிவிப்பார். வெற்றி பெற்றுவிட்டால் அரசு தனது பணியை தொடர்ந்து நடத்தும். ஒருவேளை தீர்மானம் தோற்றுவிட்டால், அது கவர்னருக்கு தெரிவிக்கப்படும்.

பெரும்பான்மையை அரசு நிரூபிக்கத் தவறிவிட்டதால் அரசு கலைக்கப்படுவதாக கவர்னர் உத்தரவிடுவார். அரசுக்கு தேவையான பெரும்பான்மை ஒன்றிரண்டு ஒட்டுகளில் ஒட்டிக் கொண்டிருப்பதால் ஆளும் கட்சி மற்றும் கூட்ட ணிக் கட்சிகளின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அன்று தவறாமல் வாக்கெடுப்புக்காக அவைக்கு வருவது மிகமிக அவசியமாகும்.