சென்னை,
2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் கூடியது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வழக்கம்போல இந்த முறையும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பட்ஜெட் குறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார். காலை 9.30 மணிக்கு உரையை வாசிக்கத் தொடங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு 11.52 மணிக்கு நிறைவு செய்தார். மொத்தம் 2 மணி நேரம் 22 நிமிடம் பட்ஜெட் உரையை அவர் வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து முடித்ததும், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை அவையில் வாசித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை 2021-22 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கடந்த ஐந்தாண்டுகளில் மாநிலம் முழுவதும் 28 கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அவற்றில், கலந்துகொண்ட பல்வேறு மாவட்டங்களின் உழவர்கள், உழவர் சங்கங்கள், இயற்கை உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாய இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கம், வேளாண் இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், விதை உற்பத்தியாளர்கள், வேளாண் வணிகர்கள், முட்டை, பால் உற்பத்தியாளர்கள், கடல்சார் மீனவர்கள், உள்நாட்டு மீனவர்கள். வேளாண் வல்லுநர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் கருத்துகள் நேரடியாகவும், மின்னஞ்சல், மனுக்கள் மூலமாகவும் பெறப்பட்டன. அவற்றில் கூறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், உழவர்களின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் வேளாண்மை, சார்புத் துறைகளுக்கென கடந்த 5 ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கைகளில் 1,94,076 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உழவர்களின் வாழ்வு வளம்பெறும் வகையிலான பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய கடந்த ஐந்து வேளாண் நிதிநிலை அறிக்கைகளை இப்பேரவையில் தாக்கல் செய்யும் வாய்ப்பினை எனக்கு அளித்ததோடு, 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வேளாண்மை-உழவர் நலத் துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், நடவடிக்கைகள் மற்றும் சாதனைகளை இப்பேரவையில் சமர்ப்பிக்கும் வாய்ப்பினையும் எனக்கு வழங்கிய தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் வேளாண்மைத் துறையை நவீனமயமாக்குதல், உழவர்களின் வருமானத்தை உயர்த்துதல், வேளாண்மையில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரித்தல், உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகிய இலக்குகளை மையமாகக் கொண்டு இந்த அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி அடைந்திட "கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்" அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து 2021-22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 707 கோடி ரூபாய் செலவினம் மேற்கொள்ளப்பட்டு 61 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
6,048 ஏக்கர் தரிசு நிலங்களில் பல்லாண்டு தோட்டக்கலைப் பயிர்களும் 52,664 ஏக்கர் தரிசு நிலங்களில் குறுகிய கால வேளாண் பயிர்களும், ஆக மொத்தம் 58,712 ஏக்கர் தரிசுநிலங்கள் தற்போது சாகுபடி செய்யப்பட்டு, விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. 41,804 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகளின் தரிசு நிலங்களில் உள்ள முட்புதர்களை அகற்றி, சமன்செய்து, உழுது சாகுபடிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க 53 இலட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 21 இலட்சம் பழச்செடிச் தொகுப்புகள் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஊரகப் பகுதிகளில், ஊட்டச்சத்துத் தேவை குறிப்பிடத்தக்க அளவு நிறைவேற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2,115 தனிநபர் ஆதிதிராவிட /பழங்குடியின விவசாயிகளுக்கு சாகுபடிக்காக ஆழ்துளை குழாய்க் கிணறுகள் அமைத்துத் தரப்பட்டுள்ளன.
10,588 சிறுபாசனக் குளங்கள், ஊருணிகள், வரத்துக்கால்வாய்கள், நீர்சேமிப்புக் கட்டுமானங்கள் தூர்வாரி மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 885 தரம்பிரிப்புக் கூடங்களுடன் கூடிய உலர்களங்கள் கட்டப்பட்டுள்ளன. இதுதவிர, 1.32 இலட்சம் தெளிப்பான்கள், வேளாண் உற்பத்திக்கான இடுபொருட்கள், தொழில்நுட்பங்கள், பயிற்சிகள், நீர்ப்பாசனம் மற்றும் மதிப்புக்கூட்டலுக்கான கட்டமைப்புகள் போன்ற பல்வேறு திட்டங்களையும் பெரும்பாலான விவசாயிகள் பயனடையுமாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் செயல்படுத்தியதால் இத்திட்டத்தினால் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்பட்டுள்ளது.
மண்வளத்தைப் பேணிக்காக்கவும், மக்கள் நலம் காக்க, உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செயல்முறைகளை ஊக்கப்படுத்திடவும் "முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்" 2024-25 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் 178 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்பட்டு இதுவரை சுமார் 21 இலட்சத்து 35 ஆயிரம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். 2025-26 ஆம் ஆண்டிலும், இத்திட்டம் 15 திட்டக்கூறுகளை ஒருங்கிணைத்து 142 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பசுந்தாள் உர விதைகள் விநியோகம், மண்வள மேலாண்மை, இயற்கை இடுபொருள் தயாரிப்பு மையங்கள், உயிர்ம வேளாண்மை, வேளாண் காடுகள் உள்ளிட்ட திட்டங்கள் 320 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு பயிர்களையும் உயிரினங்களையும் தாங்கும் மண்ணின் வளம் காக்கப்பட்டு பயிர்வளர்ச்சி மேம்படுத்தப்பட்டு மக்கள் உடல் நலனும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதை இம்மாமன்றத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
"பூமி நமது தாய், அந்த தாய்க்கு என்னவெல்லாம் நேரிடுகிறதோ அதுவே நாளை நமக்கும் நேரிடும்: ஏனென்றால், பூமி மனிதனுக்குச் சொந்தமானது அல்ல; மனிதன்தான் பூமிக்குச் சொந்தமானவன்" என்று எடுத்துக்கூறி இயற்கை வேளாண்மையினை முன்னிறுத்தியவர் நம்மாழ்வார். அவர் வழியில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
வேளாண்மையில், 2012-13 முதல் 2020-21 வரை சராசரியாக 1.36 சதவீதமாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (GSVA), 2021-22 முதல் 2024-25 வரையிலான காலத்தில் 3.03 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அடிப்படை ஆண்டான (Base Year) 2011-12 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 202425 ஆம் ஆண்டில் வேளாண்மையில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 9.97 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது ரூபாய் மதிப்பில், 2011-12ஆம் ஆண்டில், 53,75,639 லட்சம் ரூபாயாக இருந்த மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 202425 ஆம் ஆண்டில், 59,11,708 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
2021-22 ஆம் ஆண்டில், வரவு செலவுத்திட்டத்தில் ரூ.34,220 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, 2025-26 ஆம் ஆண்டில், ரூ.45,661 கோடியாக, 11,000 கோடிக்கும் மேல் அதிகரிக்கப்பட்டிருப்பதன் மூலம் வேளாண்மைக்கு இந்த அரசு அளித்துவரும் முக்கியத்துவத்தை அறியலாம்.
2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில், வேளாண்மை உழவர்நலத் துறைக்கு 47,248.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, உழவர் நலனுக்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளன.
* உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
* அனைத்து கிராமங்களிலும் வேளாண் வளர்ச்சி அடைய கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 58,000 தரிசு நிலங்கள் வேளாண் நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
* வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் 77,500 வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறுதானிய இயக்கத்துக்கு ரூ.178 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 15 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளது.
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.62 கோடி கூடுதல் மானியம் வழங்கப்பட்டுள்ளது . வேளாண் வர்த்தகம் 8 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
* கடந்த 5 ஆண்டுகளில் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் மூலமாக 456 பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.4.56 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
* அனைத்து கிராமங்களிலும் வேளாண் வளர்ச்சி அடைய கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 10,000 சிறுபாசன குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்பட உள்ளது.
* வெள்ள காலங்களில் ஒரு நெல் மணிகூட வீணாக கூடாது என்ற அடிப்படையில் ரூ.495 கோடி நிதியில் 3 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 120 நவீன சேமிப்பு தடங்கலங்களுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
* ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 70 சதவீதம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 80 லட்சம் விவசாயிகள் 184 லட்சம் ஏக்கர் நிலங்களை காப்பீடு செய்துள்ளனர்.
* விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு ரூ.33,000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.